‘உன்னைப் போல் ஒருவன்’

புழுத்துப் போன அரிசியை ரேஷன் கடையில் கடைசியாக வாங்க நிற்பவர். தன் சொத்தினைப் பறி கொடுத்து விட்டு போலீசிடம் குற்றிவாளி போல் விசாரிக்கப்படுபவர். தினமும் காலை மாலையில் பேருந்து மற்றும் தொடர் வண்டிகளில் காணக்கிடைப்பவர்.

- ‘உன்னைப் போல் ஒருவன்’

அதாங்க , திருவாளர். பொதுசனம். முகம் காட்ட விரும்பாத கோழை ஆனால் உணர்ச்சி வேகத்தால் [தார்மீகக் கோபமாம்] சமுதாயத்தைத் திருத்துகிறேன் என்று ஷங்கர் மற்றும் சுசி கணேசன் அவதாரங்களாய் வந்து திரையில் அபத்தமாக எதையாவது செய்வார்.

வழக்கமாக தானுண்டு , தன் குடும்பமுண்டு , தன் நாலு ஜான் நிலமுண்டு , தன் பிள்ளையைப் பிழைப்பிற்காக ‘கல்விச் சாலை’களுக்கு அனுப்பவதுண்டு , தங்கம் விலை உயர்வை நினைத்து தினம் தன் விதியை நொந்து கொண்டிருக்கும் திருவாளர். பொதுசனத்திற்கு தொலைக்காட்சி , தினசரிகளை விட்டால் வேறு வழியில் செய்திகளை அறிந்து கொள்ள நேரமின்மை –  ’அதுக்கெல்லாம் எங்க சார் நேரம் ?’ இல்ல ‘ரயில எரிச்சான்ல’னு ஒரு வரி விளக்கத்துடன் விலகி செல்பவரை தார்மீகக் கோபமெல்லாம் வருபவராகக் காட்டி இருக்கிறார்கள் ‘உன்னைப் போல் ஒருவனில்’.

திருவாளர். பொதுசனம் , வழக்கமாக சமூக அவலங்களுக்குப்பாஷாக மெழுகுவத்தி ஊர்வலமோ அல்லது மனிதச் சங்கலி அமைத்தோ தன் ‘எதிர்ப்பினை’ தெரிவிக்க விரும்பும் இவரை குஜராத்தில் நடந்த கலவரத்திற்காக இவ்வளவு ரிஸ்க் எடுப்பவராகக் காட்டியிருப்பது திருவாளர். பொதுசனத்திற்கே அடுக்காது என நினைக்கிறேன்.

அப்புறம் திருவாளர். பொதுசனம் யாருனே தெரியாத மாதிரி பாத்துக்குகறாங்களாம். ‘இன்ஷா அல்லாவா…?’ என்று மனைவி அலைப்பேசியில் கேட்க ‘…ம்’ என்கிறார் தாடி வைத்த திருவாளர். வேற எதாவது மதத்துல ‘இன்ஷா அல்லாவா…?’னு கேட்கும் பழக்கம் உண்டா ? ஒரு வேளை பௌத்தர்கள் இவ்வாறு பேசிக் கொள்வார்களா ? சாண்விச் சாப்பிட்டா என்ன மதம் என தெரியாதா ? அட புத்திசாலிங்களா , ஏனையா இவ்வளவு பொலிடிக்கல் கரக்ட்னெஸ் ?

குஜராத்தில் ஒரு அப்பாவி கர்பிணிக் கருவருத்துக் கொல்லப் பட்டதற்கு கோயம்பத்தூரில் குண்டு வெச்சவனப் போட்டுத்தள்ளினால் அது தார்மீகக் கோபமாம்…ஒரே கொழப்பமய்யா! குஜராத் சம்பவத்தைத் தமிழ்நாட்டில் எப்படிங்க பொருத்த முடியும் ? லாஜிக் ரொம்பவே முட்டுது சாமி. பேசாம கோயம்பத்தூரப் பத்தி பேச வேண்டியது தானே ?

ஒரு மேடை நாடகத்திற்கு உரிய அல்ல விவரண படத்திற்குறிய கருவினை தமிழ் திரை மேக்கப் போட்டால் அது ‘மைல்கல்’ படமாக மாறிவிடுகிறது !!

திருவாளர். பொதுசனம் – அவர தனியா விட்டுருங்க சார் , தன் வேலையுண்டு அவருண்டுனு இருக்கிறார் , பிளீஸ் ! அடுத்த முறை ‘வளர்ச்சி’ பணிகளுக்காக மீண்டும் தேர்ந்தெடுப்பார் மோடியை !

அரசியல், திரை விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . மறுமொழிகள் நிறுத்தப்பட்டுள்ளன