ஜே.கே. ரித்தீஷின் அடுத்த படம்

3 08 2009

நாயகன் தான் தமிழில் கடைசியாக வந்த நல்ல தமிழ் படமாக இருக்க வேண்டும். ஜே.கே. ரித்தீஷின் நடிப்பில் வெளிவந்த படம்.

பசங்க படம் பார்த்தாகிவிட்டது. நாதாரி…ச்செ…நாடொடி படம் பார்க்க என்னுடன் இருப்பவர்களுக்கு மனமில்லை. சுப்பரமணியபுரத்தின் பாதிப்பு என நினைக்கிறேன்.

விஜய் படம் பார்க்கலாம் என்றேன் வந்த பதில் ஐயோ…

வில்லுக்கு பதில் சொல்ல விஜய் விட்ட உதாரின் பாதிப்பு இது.

சரி அழகன் அஜீத் படம் பாரக்கலாம் என்றேன் வந்த பதில் ஐய்யய்யோ…

ஒரு பிரயாணத்தில் ஏகன் படம் பார்க்கும் முயற்சியில் ஏற்பட்ட தலைவலி நினைவிலிருந்து நீங்காததால் வெளிவந்த ஐய்யய்யோ இது.

13 ஆம் நம்பர் என ஏதோ ஒரு படமிருக்கே என கேட்டேன் , தூங்கும் வேளையில் துர்கனவுகளை சுமக்க மனமில்லை என பதில் கிடைக்க…

அட போங்கடா இனி ஜே.கே. அண்ணண் படமெடுத்தாத்தான் அடுத்து தமிழில் படம் பார்க்கும் நிலை என எண்ணிக்கொள்ளும் தருணத்தில் , அவரே கவலைப்படாதே தம்பி என நிஜ வாழ்க்கையில் படம் காட்டிக்கொண்டிருக்கிறார். இது நாயகனை மிஞ்சுமென நம்புவோம்.





ரசவாதியின் எலி

23 07 2009

அறிவியல் புனை கதைகளுக்குத் தனி கவர்ச்சி உண்டு. நமக்குத் தெரிந்த அறிவியல் செய்திகளை அவியலாக கதை பண்ணலாம். அல்லது அந்த அறிவியல் அறிவை கற்பனைக் குதிரையில் ஏற்றி ஒரு முறை அண்ட சராசரங்களை சுற்றி வரலாம். அல்லது அறிவியலையும் உளவியலையும் கலந்து வாசகர் மனத்தைக் குழப்பிப் பார்க்கலாம். ரசவாதியின் எலி மூன்றாம் வகையை சார்ந்தது எனலாம்.

ரசவாதியின் எலி – எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் சிறுகதை.

எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இயற்கைக் குறித்த பிரக்ஞை அவரது பல சிறுகதைகளில் வெளிபட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன , பதினெட்டாம் நூற்றாண்டின் மழை போன்ற சிறுகதைகள் இக்கூற்றுக்கு நல்ல உதாரணம்.

கதை களம் அமேரிக்காவின் மாஸச்சூஸட்ஸ். கம்போடியாவில் பிடிப்படும் எலி எப்படி உடல் இடை இழந்து வானில் பறக்க வைக்கிறார் திருச்சியை சேர்ந்த சாம். அதைவிட முக்கியமான கேள்வி அதனை ஏன் பறக்க விட வேண்டும் ? என்பதை இச்சிறுகதையில் காணலாம்.

அறிவியல் நெறிகனை இழந்து வணிக மயமாக்கலினால் கண்டுபிடிப்புகள் எவ்வாறு அதிகாரத்திடம் சிக்குண்டு இருக்கிறது. மரபு வழி இயற்கை சார்ந்த விஞ்ஞான அறிவை ஏன் இன்றைய விஞ்ஞானம் நிராகரிக்கிறது? என்று சாம் வழியாக எழுத்தாளர் வாசகருடன் சில விவாதங்களை முன் வைக்கிறார்.

இதனிடையை இந்த கேள்விக்கெல்லாம் விடையாக சூன்யக்காரிகள் எப்படி சாம்மின் பரிசோதனைக்கு வழிகாட்டுகிறார்கள். மதம் எனும் அதிகாரத்திலிருந்து விடுதலை அடையவே அவர்கள் நம்ப முடியாத சாகசங்களை செய்து காட்டினார்கள் என்பதை சாம் அறிகிறான். அவ்வாறு சூன்யக்காரிகளின் வழியை பின்பற்றுவதால் சாம்மினால் அறிவியலை அதிகாரத்திடமிருந்து விடுவிக்க முடிகிறதா ?

***

சாம் தான் இதில் அதிகாரம் எனும் ரசவாதியிடம் சிக்கிக் கொண்ட எலி என்பது போல எஸ்.ரா. நிருவ முயல்கிறார் ஆனால் கதை முடிவில்லாமல் நிற்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு வேறு மாதிரி தோன்றினால் தெரிவியிங்கள் !


புனைவின் தேவை





புனைவின் தேவை

16 07 2009

முதலில் புனைவிலக்கியத்திற்கான சில மேற்கோள்களைக் காண்போம்

புனைவு என்பது எப்படி விளக்குவது? சரியாகச் சொல்வதனால் புனைவு என்பது பல உண்மைகளை ஒன்றாக்கிப் பொய்ம்மையெனக் காட்டும் மாயம்; அதே நேரத்தில் கதைக்குள் இருக்கும் எல்லாமும் பொய்யல்ல; கதை நிகழும் வெளி கதையில் சொல்லப்படும் அந்த இடமாக இருக்காது. பொய்யான ஒரு வெளியாக அமையும். நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் அந்நிகழ்வு நடந்ததாக இல்லாமல் இருக்கலாம். பாத்திரங்களின் பெயர்களும் மாற்றம் பெற்றிருக்கலாம். எல்லாவற்றையும் மாற்றம் செய்து விடும் வேலையைத் திறம்படச் செய்யும் ஆசிரியன் புனைவில் தேர்ச்சி பெற்றவனாகிறான்.

என்கிறார் அ.ராமசாமி உயிரோசையில்

எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துடன் நேர்காணலில் பேசிய பொழது Alice Munro கூறுவதைக் கேளுங்கள். அவர் சமீபத்தில் Man Booker பரிசை வென்றவர்

நான் புனைவு இலக்கியம்தான் படிப்பேன். அது முக்கியமானது. நல்ல இலக்கியத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கத் தயங்கமாட்டேன். அவற்றில் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. செக்கோவை நான் எப்பொழுது வேண்டுமானாலும் படிப்பேன். சமீபத்தில் தல்ஸ்தோயின் War and Peace நாவலை இன்னொரு தடவை ஆரம்பத்திலிருந்து ஆற அமரப் படித்து முடித்தேன். இது ஒரு தடவை படித்துவிட்டு மூடிவைக்கும் சமாச்சாரம் அல்ல. புனைவு படிப்பதுதான் என்னுடைய மூளைக்கு வேலை கொடுக்கிறது. என்னை ஆசுவாசப்படுத்த, மனநிலையைத் தளரவைக்க மட்டும் நான் non-fiction படிக்கிறேன்.

ஆதிகாலத்திலிருந்து இன்றுவரை மனிதன் புனைவு இலக்கியத்தில்தானே நாட்டம் செலுத்தியிருக்கிறான். தலைமுறை தலைமுறையாகப் புனைவுக் கதைகள்தானே சொல்லியிருக்கிறான். பழம்பெரும் இதிகாசங்கள் எல்லாம் புனைவுதானே.

Barbara Tuchman என்ற எழுத்தாளரின் கட்டுரை இலக்கியம் எனக்குப் பிடிக்கும். அவர் முப்பது வருடங்களுக்கு முன் பிரபலமானவர்; இரண்டு புலிட்ஸர் பரிசுகள் பெற்றவர். இவருடைய Guns of August என்ற நூலை ரசித்துப் படித்திருக்கிறேன். ஆனால், தீவிரமான படிப்புக்கு நான் எப்போதும் நாடுவது புனைவு இலக்கியத்தைத்தான்.

இலக்கியவாதியும் எழுத்தாளருமான அம்பை கூறுவது

என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் உள்ள ‘உண்மகளை’ப் பற்றியது அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். இந்த ‘உண்மை’யின் தன்மை மாறியபடி இருக்கிறது நம் வாழ்வில் என்பதுதான் உண்மை. வாழ்க்கையின் போக்குக்கு ஏற்ப இதை நாம் பல்வேறு கட்டங்களில் பல வகைகளில் உணருகிறோம். அதை நாம் எப்படி மொழியாக்குகிறோம் என்பதுதான் இலக்கியம். நம் உணர்வுகளின் வெளிப்படை சில சமயங்களிலும், அவற்றின் மறைப்பு சில சமயங்களிலும், உணர்வுகளை இலக்கியமாக்குகிறது. இந்த வெளிப்படை-மறைப்பு இவற்றின் கண்ணாமூச்சிதான் இலக்கியம் – தென்றல் ஜூலை 2009 இதழ்

தீராநதியில் எழுத்தாளர் சாரு நிவேதிதா

என் நண்பர் மனுஷ்ய புத்திரன் அடிக்கடி கூறுவார் ; ‘ எவனொருவன் ஒரு கலைப் படைப்பை அணுகும்போது அது உண்மையா , பொய்யா ?’ என்று கேள்வி கேட்கிறானோ அவனோடு எனக்கு எந்த சம்பாஷணையும் சாத்தியமில்லை ’ என்று. நான் ஒரு கலைஞன். நான் பொய்யை எழுதுவேன் ; உண்மையை எழுதுவேன். எதை வேண்டுமானாலும் எழுதுவேன். கலைஞன் என்பவன் உலக மக்களின் சுபிட்சத்திற்காக தன் சட்டைப் பையில் பல உண்மைகளை வைத்து விநியோகித்துக் கொண்டிருப்பவன் அல்ல , உண்மையைச் சொல்வது என் வேலை அல்ல. அதற்குப் பல தீர்க்கதரிசிகளும் உபதேசிகளும் இருக்கிறார்கள்

[தொடரும்]





சங்கரன் கோயிலில் நடந்தது என்ன ?

11 07 2009

உயிர்மையில் அழகிய பெரியவன் எழுதிய கட்டுரை:

சாதியின் பெயரால் மேலும் இரண்டு கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளன. கொடூரமான கொலைகள். நாகரிகச் சமூகத்தின் தலையைக் கவிழச்செய்யும்படியான கொலைகள். குருதி வேட்கை கொண்டு மனித மனங்களின் ஊடாக மறைந்து திரியும் சாதிமிருகம், தலித் சமூகத்தில் பிறந்ததைத் தவிர வேறு எந்த ‘தவறும்’ செய்திராத இரு மனிதர்களின் இரத்தத்தைப் பருகி தன் விடாயைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அருகே இருக்கிறது செந்தட்டி. தலித்துகள் சிறுபான்மையாக இருக்கின்ற கிராமம். சுமார் 45 குடும்பங்களே அவர்களின் எண்ணிக்கை. கோனார் (யாதவர்) களும், வாணியச்செட்டியார்களும் 350க்கும் மேற்பட்ட குடும்பங்களாய் இருக்கின்றனர். இக்கிராமத்தில் ஆதிக்கச் சாதியினர் இவர்களே.

செந்தட்டியில் முப்பிடாதி அம்மன் கோவில் இருக்கிறது. இக்கோயிலை அக்கிராமத்தில் இருக்கிற எல்லா மக்களின் நிதியுதவி பெற்றே கட்டியிருக்கிறார்கள். தலித் மக்கள் இக்கோவிலைக் கட்டுவதற்கென அளித்த பங்குத்தொகை ரூபாய் ஒரு லட்சம்! இவ்வளவு பணத்தைப் பங்குத் தொகையாகக் கொடுத்தும் அவர்கள் அக் கோவிலில் சென்று வழிபட உரிமையில்லை. இந்த நிலை நீண்ட காலமாக இருந்தது.

ஆதிக்கச்சாதியினர் நடத்தும் திருவிழாக்களிலும், வழிபாடுகளிலும் தலித் மக்கள் ஓரம் ஒதுக்கில் நின்று பங்கேற்று வந்ததில் கடந்த ஆண்டுவரை சிக்கல் இல்லாமல் எல்லாமே ‘சுமுகமாக’ போய்க்கொண்டிருந்தது! பிரச்சினையில்லை! எங்கும் அமைதியும் சாந்தமும் நிலவி வந்தது! தலித்துகளும், ஆதிக்கச் சாதியினரும் தாயாய் பிள்ளையாய் பழகிக்கொண்டு வந்தனர்! இப்படியே எத்தனை காலத்துக்குத்தான் இருப்பது என்று செந் தட்டி தலித் மக்கள் குரல் எழும்பத் தொடங்கினர் அவர்கள் வழிபாட்டு உரிமையைக் கேட்டதிலிருந்து அங்கே சிக்கல்கள் தொடங்கின.

தலித்துகளை ஆதிக்கச்சாதியினர் முப்பிடாதி அம்மன் கோவிலில் வழிபடவிடவில்லை. தலித் மக்கள் தங்களின் குடும்ப அட்டைகளைத் திரும்ப அளித்துவிட்டு, கிராமத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர். அதிகாரிகளின் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் மூன்று சாதியைச் சேர்ந்தவர்களும் தனித்தனியே திரு விழாவினை நடத்திக்கொள்ளலாம் என்று முடிவானது. முதல் இரண்டு சாதியினர் தமது திருவிழாக்களை சென்ற மாதம் தொடங்கி நடத்திக் கொண்டனர். தலித் மக்கள் தங்களின் முறைக்கு ஏற்ப திருவிழாவை நடத்த முயன்றபோது அனுமதிக்கப்படவில்லை. மீண்டும் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடந்தது. மார்ச் 6 ஆம் தேதி நடைபெற்ற அந்தப் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து தலித் மக்கள் கோவிலில் பந்தக்கால் நடுவதற்கு முயன்றனர். அப்போது நடந்த தாக்குதல்களில் தலித் பெண் கருப்பாயியும், ஆதிக்கச்சாதிப் பெண் குருவம்மாவும் காயமடைந்து சங்கரன் கோவில் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நிலைமை இறுக்கம் அடைந்துவிட்டது. சாதி ஆதிக்க உணர்வு மூர்க்கம் கொள்ளத் தொடங்கிவிட்டது. அந்த வெள்ளிக்கிழமை இரவுதான் சங்கரன் கோவிலில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த தலித்துகள் பரமசிவமும், ஈஸ்வரனும் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

சங்கரன் கோவிலில் இருந்து இரவிலே திரும்பிக்கொண்டிருந்த கருப்பசாமி, ஈஸ்வரன், பரமசிவம், சுரேஷ் ஆகியோரை ஆதிக்கச்சாதியினர் வழி மறித்து ஆயுதங்களால் தாக்கியிருக்கிறார்கள். படுகாயமடைந்த கருப்பசாமி தப்பி ஓடிவிட்டார். ஈஸ்வரன் பரவசிவம் ஆகியோர் அதே இடத்தில் செத்தனர். கொடூரமான காயங்களுடன் சுரேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பதினான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று கொடூர ஆயுதங்களுடன் இந்தக் கொலைகளை நிகழ்த்தியிருக்கிறது. பதினெட்டுப் பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இவர்களில் பதினாறு பேர் கைதாகியுள்ளனர். மற்றவர்கள் தலைமறைவாகத் திரிகின்றனர். இக் கொலைகளில் கைது செய்யப்பட்டவர்களிலே ஒரு இளைஞர் வாணியச் செட்டி சமூகத்தை சேர்ந்தவராவார். பொதுவாக எதிலும் தலையிடாமல் வணிகத்தை மட்டுமே கவனித்துக் கொண்டு இருந்து வரும் அச்சமூகத்திலிருந்தும் இப்படி ஒருவர் கொலைகளில் பங்கேற்றிருப்பது சமூக ஆய்வாளர்களை நுணுக்கமாக யோசிக்க வைத்திருக்கிறது. இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் மார்ச் 3ஆம் வாரம் வரையிலும் தலித் மக்கள் செந்தட்டிக்குத் திரும்ப வந்து சேரவில்லை. கொலை நடந்தபிறகு உயிருக்குப் பயந்து குடும்பங்களோடு சங்கரன் கோவிலுக்குப் போய் அங்கிருக்கும் சமுதாயக் கூடத்தில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். எல்லாம் நடந்தபிறகு அதிகாரிகள் சென்று நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் என அவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எல்லா சாதி மோதல்களுக்கும் பின்னால் ஆதிக்கச் சமூகம் ஒரு பொய்யான அல்லது அநீதியான காரணத்தைக் கற்பித்து தான் செய்த கொலைகளை நியாயப்படுத்த முயலும். இந்தியாவை மட்டுமின்றி உலகையே உலுக்கிய கயர்லாஞ்சி படு கொலைக்குப் பிறகு அக்கொலைகளைச் செய்த ஆதிக்கச்சாதியினர் அப்படித்தான் சொன்னார்கள். கொல்லப்பட்ட தலித் பெண்ணான சுரேகாவுக்கும், அவரின் உறவுக்காரரான சித்தார்த் கஜ்பியேவுக்கும் முறைகேடான உறவு இருந்தது. அதனால் தான் கொன்றோம் என்றார்கள். இப்போது இங்கும் அப்படி காரணம் கற்பிக்கும் முயற்சிகள் நடக்கத்தொடங்கியுள்ளன. பேச்சுவார்த்தையின்போது பெரிய மாடசாமி எனும் தலித், ஆதிக்கச்சாதி பெண் குருவம்மாவைத் தாக்கினார். அதற்குப் பழி வாங்கத்தான் பெரியமாடசாமியின் அப்பாவான, அறுபது வயதினைக் கடந்த ஈஸ்வரனும், அவரின் உறவினர்களும் குருவம்மாவின் உறவினர்களால் கொல்லப்பட்டனர் என்று செய்திகள் உலவவிடப்படுகின்றன. இண்டியன் எக்ஸ்பிரஸ் (8.3.2009) போன்ற நாளேடுகளிலும் இப்படித்தான் செய்திகள் பதிவாகியிருக்கின்றன. ஆனால் இவை சிக்கலை வேறு மாதிரி சித்தரிக்க முயலும் காவல்துறை மற்றும் அரசு எந்திரத்தின் முயற்சிகள்தான். ஆதிக்கச் சாதியினரின் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த சாதிய வன்மத்திற்கு இக்காரணங்கள் ஒரு பொய்க்காரணம் மட்டும்தான். புரையோடி பருத்திருக்கும் அதன் காயங்கள் நிணமும் சீழுமாக எப்போதும் வழிவதற்கு காத்தே இருக்கின்றன. நடந்த கொலைகள் கொடூரமான சாதியக்கொலைகள். ஆதிக்கச்சாதியினர் தமது அடக்கு முறையையும், அதிகாரத்தையும் காட்டுவதற்காகச் செய்தகொலைகள். தலித் மக்கள் தமக்கான உரிமைகளைக் கோருகிறபோது அவர்களை அச்சுறுத்தி பின்வாங்கச் செய்வதற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள். இப்படியான மனிதத்தன்மையற்ற கொடூரங்களின் வழியாகவேதான் சாதியம் தனது அதிகாரத்தை ஒவ்வோர்முறையும் புதுப்பித்துக் கொள்கிறது.

தமிழகம் முழுவதும் சாதிய மீறல்கள் இடையறாது நடந்தபடியேதான் இருக்கின்றன. பல தடைகளைத் தாண்டி ஊடகங்களில் பதிவாகும் செய்திகளைக்கொண்டு இதை மதிப்பிடமுடியும். இப்படிப் பதிவாகும் செய்திகளைப்போல பல மடங்கு வெளியில் வராதபடி தடுக்கப்பட்டு விடுகின்றன. தலித்துகளுக்கு எதிராக நடக்கும் ஒவ்வொரு 50 குற்றங்களிலும் ஒரு வழக்கு என்ற விகிதத்தில்தான் பதிவாகின்றன என்கிறது ஆய்வு. இவ் வாண்டின் தொடக்க மாதங்களில் விழுப்புரம், ராமநாதபுரம், திருச்சி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, கோவை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலிருந்து சாதிய வன்கொடுமை செய்திகள் பதிவாகியிருக்கின்றன. சிவகங்கை மாவட்டம் சாதி வன்கொடுமைகளில் முதல் இடத்தில் இருப்பதாக அண்மையில் தனது ஆய்வறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறது. மக்கள் கண்காணிப்பகம். தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, இளையான் குடி ஆகிய வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் கடுமையான சாதியக் கொடுமைகள் இருப்பதாகவும், மானா மதுரை வட்டம் திருபுவனத்தில் இது உச்சத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது. அம்மாவட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டில் தலித் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சாதியக் கொடுமைகளுக்காக நூற்றுப்பத்து வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. (இந்தியன் எக்ஸ்பிரஸ். 2.3.09) திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் பத்துக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் சொல்கின்றன அவற்றில் இரண்டு கொலைகள் சாதிக்கானது தென்மாவட்டங்கள் இப்படித்தான் எப்போதுமே சாதியக்கொடுமைகளில் முன்னணியில் நிற்கின்றன.

சங்கம் வைத்து தமிழையும், பண்பாட்டையும் வளர்த்த தெற்கு, தமிழைப் பிறப்பித்ததாகப் பெருமை கொள்ளும் தெற்கு, சாதியத்தில் தோய்ந்து நாறிக் கிடக்கிறது. பெருவாரியான தென் தமிழகப் படைப்பாளிகளாலும், திரைக் கலைஞர்களாலும் பெருமிதத்துடன் முன்வைக்கப்படும் தெற்கும் அதன் நிலப்பரப்பும், கிராமங்களும் சாதியின் கறைபடிந்து கிடக்கின்றன. தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் அறிக்கைகள் இந்திய அளவில் மட்டுப்படாமல் வளர்ந்துவரும் சாதிய வன்கொடுமைகளை புள்ளி விவரங்களினடிப்படையில் சொல்கின்றன. தலித் மக்களுக்கு எதிரான வழக்குகள் 3.6 சதவீத அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்கிறது அறிக்கை. 2005 ஆம் ஆண்டில் பதிவான வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை 26,127. அடுத்த ஆண்டில் 27,070 வழக்குகளாக அது உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் மூன்று தலித் பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்; இரண்டு தலித்துகள் கொல்லப்படுகிறார்கள்; இரண்டு தலித் வீடுகள் கொளுத்தப்படுகின்றன; பதினொரு தலித்துகள் காயப்படுத்தப்படுகின்றனர் என்கிறது அவ்வறிக்கை.

இரண்டாண்டுகளுக்கு முன்பு எம்.ஏ.பிரிட்டோ மேற்கொண்ட ஆய்வில் தமிழகத்திலே தென்மாவட்டங்கள் சாதி வன்கொடுமைகளில் முதலிடம் வகிப்பதாக அறிய வந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஆறு தென்மாவட்டங்களில் 1996 முதல் 2001 வரை நடந்த சாதிய வன்கொடுமைகள், தமிழக அளவில் மூன்றில் ஒரு பங்காகும். என்றது பிரிட்டோவின் ஆய்வு. 1996 தொடங்கி 2001 வரை யிலான ஆறு ஆண்டுகளில் மொத்த தமிழகத்திலும் பதிவான வன்கொடுமை வழக்குகள் 5064. இவற்றில் மேற்சொன்ன தென்மாவட்டங்களில் பதிவானவை 1597. மொத்த வழக்குகளில் சுமார் 31.53 சதவிகித வழக்குகள் இம்மாவட்டங்களுடையவை.

பொது இடங்களைப் பயன்படுத்தியதற்காகவும், கோவில் கொடை மற்றும் திருவிழாக்களை நடத்தியதற்காகவும், தேர்தலில் நிற்க முயன்றதற்காகவும், தமது சம உரிமைகளைக் கோரியதற்காகவும், பாலியல் சுரண்டலை எதிர்த்ததற்காகவும்தான் பெரும்பாலான தலித் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். காயப்படுத்துதல், தாக்குதல் ஆகியவற்றுக்கு அடுத்து கொலைகளும், கொலை முயற்சிகளுமே அதிக அளவில் இருக்கின்றன. இந்த வன் கொடுமைகளில் கம்பு, வீச்சரிவாள் என்று கொடூரமான ஆயதங்களே தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் வீச்சரிவாளே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒவ்வொரு வெட்டும் மானுடத்தின் வேர் வரை ஊடுருவி விழுந்துள்ளது.

சற்றேறக்குறைய 24 இடைநிலை சாதியினர்களால் சாதிய வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

அடிப்படையான மனித உரிமைகளை, மாண்பினைக்கூட தலித் மக்களுக்கு வழங்க விருப்பமில்லாத மன நிலைகளில்தான் தென்தமிழகத்தின் பல வன்கொடுமைகள் நடந்துள்ளன. பொது இடங்களிலே செருப்பு அணிந்து செல்லக்கூடாது என்பதற்காகவும், செத்த மாட்டை தூக்க மறுத்ததற்காகவும், முழுக்கால் சட்டை போட்டதற்காகவும்கூட தலித்துகள் அங்கு தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

தலித் மக்களின் புகார்களைப் பதிவு செய்வதில் சுணக்கம் காட்டுவதிலும், வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்ய மறுப்பதிலும், சரிவர புலன் விசாரணை செய்யாமல் விடுவதிலும், சமயங்களில் குற்றவாளிகளுடனேயேகூட உறவாடுவதிலும் காவல்துறை முன்னிலையில் நிற்கிறது என்கிறது ஆய்வு.

இவ்வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சித் தலைவர்கள் பின்னணியில் இருந்து செயல்படுவதும், குற்றவாளிகளை தப்புவிக்க உதவி செய்வதும் மிக இயல்பாக நடக்கின்றன என்கிறது இவ்வாய்வு. இப்போதெல்லாம் இந்தப் பின்னணி ஆதரவுகள் மிக வெளிப்படையாகவேகூட நடக்கும்அளவுக்கு இருக்கின்றன. அண்மையில் இந்திய அரசியல் கட்சிகளின் வரிசையில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சேர்ந்த புதிய கட்சியான கொங்கு மண்டல கவுண்டர்களின் அமைப்பு தனது முதல் மாநாட்டிலேயே ‘கவுண்டர்கள் பாதிக்கப்படுவதால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று தீர்மானம் போட்டிருக்கிறது. இப்படி அதிகாரத்தாலும், அரசியலாலும், பணத்தாலும், அறியாமையின் தீவிரத்தாலும் சாதி வளர்க்கப்பட்டு வருகிறது.

தொண்ணூறுகளின் இடைப்பகுதியில் சாதியக் கலவரங்களால் தென் தமிழகமே நிலைகுலைந்தது. அரசு அறிக்கைகளும், ஆய்வுக் கருத்துகளும் முண்டிக்கொண்டு வெளிவந்தன. தென் தமிழகத்தில் நிலவுகின்ற வேலையின்மையும், வறுமையும், கல்வியறிவின்மையும், தொழில் வளர்ச்சியின்மையும்தான் இம்மோதல்களுக்கு அடிப்படை என்றன சில ஆய்வுகள். அந்த நிலை இன்றளவும் அங்கே நீடிக்கிறது. கலவரங்களுக்குப்பிறகு வந்த அரசுகள் எதுவும் சிறப்புத் திட்டங்களை இதற்கெனத் தீட்டவில்லை. சாதியொழிப்புக்கான எந்தத் திட்டங்களும் அரசியல் கட்சிகளிடமோ, அரசுகளிடமோ இல்லை. அமெரிக்க அதிபராக ஒபாமா பதவிக்கு வந்ததும் நிறவெறி பற்றிய வரலாற்றுச் செய்திகள் எல்லோராலும் அசைபோடப்பட்டன. இந்திய அரசியல்வாதிகளால் ஒபாமாவைப்போல சாதியத்தைக் கடந்து வர முடியுமா? என்று வினாவினை எழுப்பி ஜெயந்தி நடராசன் போன்றோர் கட்டுரைகள் எழுதினர். எல்லாமும் அந்தந்தத் தருணங்களுடனே முடிந்து போகின்றவையாகி விட்டன.

ஒபாமாவின் புகழ்பெற்ற வெற்றி உரையின் பின்பகுதியில் ஆன் நிக்சன் கூப்பர் என்கிற ஒரு ஆப்ரோ அமெரிக்கப் பெண்ணைப் பற்றிய செய்திகள் வருகின்றன. 106 வயது நிரம்பிய அப்பெண் மணி அட்லாண்டா பகுதியிலேவாக்குச் சாவடிக்கு வந்து ஒபாமாவுக்கு வாக்களித்திருக்கிறார். அப்பெண்ணின் காலத்தை சம காலத்தோடு ஒப்பிட்டு, நிறவெறி எப்படி இருந்தது, அக்கொடுமை எவ்வாறு கடந்து போனது எனப் பேசுகிறார் ஒபாமா. இந்தியாவிலிருக்கும் எந்த அரசியல் தலைவர்களாலும், சாதாரணக் குடிமகனாலும் இப்படி சாதி என்ற ஒன்று இருந்தது, அது இவ்வாறு தான் கடந்துபோனது என்று இன்றைக்குப் பேச முடியுமா?

1868இல் அமெரிக்காவில் ஒரு சட்டத்திருத்தம் (14வது திருத்தம்) மூலமாக நிறவெறி ஒழிக்கப்பட்டது. ஆனாலும் 1964 வரைக்கும்கூட அங்கே ஆப்ரோ அமெரிக்கர்கள் தங்களுக்கான வாக்களிக்கும் உரிமைக்காகவும், முழுமையான குடியுரிமைக்காகவும் போராடிக் கொண்டிருந்தனர். இந்தியாவிலோ நிலைமை வேறு. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தபோது தனதுஆசிரியர் ஜான்டுவே, புக்கர்டி வாஷிங்டன் போன்றோரின் கருத்தியல்களால் உத்வேகம் பெற்ற அம்பேத்கர் 1932-இலேயே தலித்துகளுக்கான வாக்குரிமையைப் பெற்றுத் தந்துவிட்டார். அம்பேத்கர் காலம் மட்டுமின்றி புத்தர் தொடங்கி இன்று வரையிலான நவீன காலம்வரை சாதியொழிப்புப் போராட்ட வரலாறு நமக்கு இருக்கிறது. ஆனால் இன்னமும் ஒபாமாவைப்போல பெருமிதத்தோடு சாதியை ஒழித்த வரலாற்றை நம்மால் பேசமுடியவில்லை. சட்டங்கள் இருக்கின்றன. கல்வியறிவு பெற்றிருக்கிறோம், அரசு நிர்வாகமிருக்கிறது, நிதியிருக்கிறது. ஆனாலும் இன்னமும் சாதியையும் அதன் வன் கொடுமைகளையும் முற்றிலுமாகத் துடைத்தெறிய முடியவில்லை. ஒரு நோய் தொற்றுவதற்கோ, தீப் பற்றுவதற்கோ பொருட்கள் மற்றும் வினைகளின் தொடர் சுழற்சி வேண்டும். நோய்க்கிருமி, கடத்தி, நோய் ஏற்பவர் என்றும் தீ, ஆக்சிஜன், தீப்பற்றும் பொருள் என்றும் இச்சுழற்சியை வரையறுக்கலாம். இத்தொடர்பு வட்டத்தில் எங்காவது ஒரு இடத்திலே உடைப்பை ஏற்படுத்தி தொடர்பைத் துண்டித்தால்தான் தீயோ, நோயோ பற்றாது. சாதியும் இப்படியான வளையத்தைப் பெற்றே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மதம், அதிகாரம் (பொருள், அரசு, பெரும்பான்மை), செயலாக்கம் என்கிற வளையம் அது. இதை உடைத்துப் பிரிக்காதவரை சாதி இங்கே உயிர் வாழும். இந்த நிலையே இங்கு தொடர்கிறது. வெட்டுகள் விழுந்துகொண்டே இருக்கின்றன. தலைகளும், உறுப்புகளும் துண்டாடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இங்கே ஒரு பிரேதப் பரிசோதனையின் அறிக்கை இருக்கிறது. 30-6-1997 அன்று மதுரை மேலவளவில் வெட்டிக் கொல்லப்பட்ட முருகேசன் என்ற தலித்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கை. சாதிவன்கொடுமைகளை நிகழ்த்த எண்ணுவோரும், சாதியை ஒழிக்க விரும்புவோரும் அவசியம் படிக்கவேண்டிய அறிக்கை.

“பிரேதத்தின் உடல் முழுவதும் மரண விறைப்பு காணப்பட்டது.
1. சுமார் 37 வயது மதிக்கத்தக்க, தனியாகத் துண்டிக்கப்பட்ட ஆணின் தலை தனியாகக் காணப் பட்டது. அதைப் பரிசோதித்து ஆய்வு செய்த தில் தலை 4வது மற்றும் 5வது கழுத்து எலும்புகளுக்கு இடையே உள்ள குருத்து எலும்பை வெட்டியும் அதைச் சுற்றியுள்ள தசைகள், ரத்த நாளங்கள், நரம்புகள், உணவுக் குழாய், மூச்சுக் குழாய் மற்றும் தண்டுவடம் ஆகியவற்றை வெட்டிய நிலையில் காணப்பட்டது.

2. வலது தாடையில் வலது கண் புருவத்திற்கு 1.5 செ.மீ. வெளிப்புறமாக 15 x 1.5 எலும்பு அளவு ஆழம்வரை சென்றிருந்த வெட்டுக்காயம். அந்தக் காயத்தை அறுத்து ஆய்வு செய்த போது அதன் கீழ் உள்ள தசைகள், ரத்தநாளங்கள், நரம்புகள் மற்றும் கீழ்த்தாடையும் புறப்பகுதியில் வெட்டிய நிலையில் காணப்பட்டது.

3. இடது கன்னத்தில் இடதுபுற புறப்பகுதிக்கு 5 செ.மீ. மேலே இடது கன்னத்தில் 4×1 செ.மீ. x தசை அளவு ஆழத்திற்கு ஒரு வெட்டுக்காயம் காணப் பட்டது. அந்தக் காயத்தில் அனைத்து வெட்டுக்காயங்களின் ஓரங்கள் சீராகக் காணப்பட்டன.

தலையில்லாத முண்டத்தில் காணப்பட்ட காயங்கள்-

1. தலை தனியாகத் துண்டிக்கப்பட்ட நிலையில் அந்தப் பிரேதம் காணப்பட்டது. கழுத்து எலும்பில் 5வது எலும்பு கழுத்து எலும்புப் பகுதி துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட பிரேதம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள், ரத்த நாளங்கள், நரம்புகள், உணவுக் குழாய் மூச்சுக் குழாய் மற்றும் தண்டுவடம் ஆகியவற்றில் வெட்டிய நிலையில் காணப்பட்டது.

2. இடது மார்பின் மார்புக்காம்புக்கு 5 செ.மீ. கீழே 5×1.5 செ.மீ. இடது மார்பு அறைக்கு 7வது விலா இடைவெளி சென்றிருந்த படுக்கை வாட்டில் சாய்வாக செங்குத்துக்காயம். அந்தக் காயத்தை அறுத்து ஆய்வு செய்தபோது, காயம் அதனடியிலுள்ள தசைகள் ரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் நுரையீரலின் கீழ் கதுப்பை 4×1 செ.மீ. அளவில் முழுமையாகத் துளைத்துச் சென்றிருந்தது. இடது புற மார்பு அறைக்குள் 120 மில்லி லிட்டர் அளவில் ரத்தமும் ரத்தக் கட்டிகளும் காணப்பட்டன. காயம் கீழே நோக்கியும் பின் நோக்கியும் சென்றிருந்தது.

3. வயிற்றின் முன்பகுதியில் தொப்புளுக்கு மேலே 7 செ.மீ. தூரத்தில் மையப் பகுதியில் 5 x 1.5 செ.மீ. வயிற்று அறைக்குள் சென்றிருந்த குத்துக்காயம். அந்தக் காயத்தின் வழியே குடல் வெளியேறிய நிலையில் காணப்பட்டது. அந்தக் காயத்தின் முன்முனை வளைவாகவும் வெளிமுனை கூர்மையாகவும் ஓரங்கள் சீராகவும் காணப்பட்டன. அந்தக் காயம் சாய்வாக மேல்நோக்கியும் பின் நோக்கியும் சென்று கல்லீரலில் 4.1 செ.மீ. அளவில் முழுமையாக துளைத்துச் சென்று இருந்தது.

4. வலது புற வயிற்றின் தொப்புளுக்கு 4 செ.மீ. கீழே வெளிப்புறத்தில் 5.5 செ.மீ. x 1.5 செ.மீ. வயிற்று அறைக்குச் சென்றிருந்த படுக்கை வாட்டில் சாய்வான குத்துக்காயம். அந்தக் காயத்தின் முன்முனை வளைவாகவும், வெளிமுனை கூர்மையாகவும் ஓரங்கள் சீராகவும் காணப்பட்டன. அந்தக்காயத்தை அறுத்து ஆய்வு செய்த போது, காயம் சாய்வாக பின் நோக்கியும் கீழ் நோக்கியும் உள் நோக்கியும் சென்று சிறுகுடலின் நடுப்பகுதியின் முன் சிறுகுடலும், நடுச்சிறுகுடலும் சந்திக்கும் இடத்திலிருந்து 30செ.மீ.x 70 செ.மீ. இடைவெளியில் முறையே 2.5 செ.மீ. குடல் அறைக்குள்ளும் 2.5 x .5 செ.மீ. குடல் அறைக்குள்ளும் சென்ற நிலையில் காணப்பட்டது.

5. இடுப்பு எலும்பு வலதுபுற மூட்டிலிருந்து 5 செ.மீ. மேலே வயிற்றின் அல்லைப்பகுதியில் 5×1.5 செ.மீ. வயிற்று அறைக்குள் சென்றிருந்த குத்துக்காயம் அந்தக் காயத்தின் முன்முனை வளைவாகவும், வெளி முனை கூர்மையாகவும் அதன் ஓரங்கள் சீராகவும் காணப்பட்டன. அந்தக் காயத்தை அறுத்து ஆய்வு செய்ததில் காயம் மையப்பகுதியை நோக்கிச் சென்று சிறுகுடலில் கடைசிப் பகுதியில் பெருங்குடலும் சிறுகுடலும் சந்திக்கும் இடத்திலிருந்து 20x 180 செ.மீக்கு முன்புறத்தில் (முன்னதாக) முறையே 2x.5 செ.மீ. குடல் அறைக்குள் 1.5 செ.மீ. x 5 செ.மீ. குடல் அறைக்குள் சென்றிருந்தது.

6. வலது தோள்பட்டையின் மேல்பகுதியில் 17×8 செ.மீ. எலும்பு அளவு ஆழத்திற்கு ஒரு பிளந்த வெட்டுக் காயம் காணப்பட்டது. அந்தக் காயத்தை அறுத்து ஆய்வு செய்தபோது காயம் அதன் கீழ் உள்ள தசைகள், ரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் மேல் கை எலும்பில் தலைப் பகுதி பகுதியாக வெட்டிய நிலையில் காணப்பட்டது.
7. இடது முழுங்கையின் வெளிப்பகுதியில் 6x 1.5 செ.மீ. தசை அளவு ஆழத்திற்கு படுக்கை வாட்டில் சாய்வான ஒரு வெட்டுக்காயம் காணப்பட்டது.

8. காயம் எண். 7க்கு 2 செ.மீ. கீழே 3.5 x 1.5 செ.மீ. x எலும்பு ஆழத்திற்கு ஒரு வெட்டுக்காயம் காணப்பட்டது.
9. இடதுபுற முழங்கையின் பின்பகுதியில் 4x 1.5 செ.மீ. x எலும்பு ஆழத்திற்கு படுக்கைவாட்டில் சாய்வான ஒரு வெட்டுக்காயம் காணப்பட்டது.

10. இடது முன்கையில் முழங்கைக்கு 5 செ.மீ. கீழே 5x 1 செ.மீ.x தசை அளவு ஆழத்திற்கு படுக்கைவாட்டில் சாய்வான ஒரு வெட்டுக் காயம் காணப்பட்டது.

11. இடது முன்கையின் உள் பகுதியில் மணிக்கட்டுக்கு 8 செ.மீ. மேலே 8×3.5 செ.மீ. xதசை அளவு ஆழத்திற்கு படுக்கை வாட்டில் சாய்வான வெட்டுக்காயம் தோல் மேல்நோக்கிய நிலையில் காணப்பட்டது.
12. இடது கையின் பின்பகுதியில் சிறுவிரல் மற்றும் மோதிர விரல் பகுதியில் படுக்கை வாட்டில் சாய்வான வெட்டுக்காயம் காணப்பட்டது.

13. வலது முன்கையில் வெளிப்பகுதியில் 8×2.5 செ.மீ. எலும்பு அளவு ஆழத்திற்கு படுக்கை வாட்டில் சாய்வான ஒரு வெட்டுக்காயம் காணப்பட்டது.

14. வலது முழங்கையின் பின் பகுதியில் 4.5 செ.மீ. x 1 செ.மீ. xஎலும்பு ஆழத்திற்கு படுக்கை வாட்டில் சாய்வான ஒரு வெட்டுக்காயம். அதன் அடியில் உள்ள முன்கையில் உள் எலும்பை பகுதியாக வெட்டிய நிலையில் காணப்பட்டது.

15. முன் கையின் மணிக்கட்டிற்கு 8 செ.மீ. மேலே 4 x1 செ.மீ. x தசை அளவு ஆழத்திற்கு படுக்கை வாட்டில் சாய்வான ஒரு வெட்டுக்காயம் காணப்பட்டது.

16. வலது முன் கையில் மணிக்கட்டிலிருந்து 4 செ.மீ. மேலே 3.5 x1 செ.மீ. தசை அளவு ஆழத்திற்கு படுக்கை வாட்டில் சாய்வான ஒரு வெட்டுக்காயம் காணப்பட்டன.

17. வலது முதல் விரலின் இடை வெளியில் 6×1.5 செ.மீ. ஜ் எலும்பு ஆழத்திற்கு செஞ்குத்துவாக்கில் சாய் வான ஒரு வெட்டுக்காயம். அதன் கீழ் உள்ள தசைகள் ரத்த நாளங்கள், நரம்புகள், முதலாவது விரல் கடை எலும்பு பகுதியாக வெட்டிய நிலையில் காணப்பட்டது.

18. வலது முழங்காலின் வெளிப்பகுதியில் 10செ.மீ. x2.5செ.மீ. அளவில் எலும்பு அளவு ஆழத்திற்கு படக்கை வாட்டில் ஒரு சாய்வான வெட்டுக் காயம். அந்தக் காயத்தை அறுத்து ஆய்வு செய்த போது அந்தக் காயங்கள் அதன் அடியிலுள்ள தசைகள், ரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் காலில் வலது புற வெளிப்புற எலும்பு பகுதி யாக வெட்டிய நிலையில் காணப்பட்டன.

19. தொப்புளுக்கு 1 செ.மீ. வெளிப்புறமாக இடதுபுற வயிற்றில் 3 அறுவைக் காயங்கள். 1 செ.மீ. மற்றும் 1.5 செ.மீ. இடைவெளியில் முறையே 1.5x.5x தசை அளவு ஆழத்தில் 2x.5 செ.மீ. x தசை அளவு ஆழத்தில் 1 x .5 செ.மீ x தசை அளவு ஆழத்தில் மூன்று அறுவை காயங்கள் காணப்பட்டன.

20. வயிற்றின் வலது புற வெளிப்புற உட்பகுதியில் தொப்புளுக்கு 8 செ.மீ. மேலே வெளிப்புறத்தில் படுக்கை வாட்டில் சாய்வான ஒரு அறுவை காயம் 3 x.5 செ.மீ. xதசை அளவு ஆழத்தில் காணப்பட்டது.
அனைத்து அறுவைக் காயங்களின் ஓரங்கள் சீராகக் காணப்பட்டன.’

2006ஆம் ஆண்டு மேலவளவு கொலையாளிகளுக்கு தண்டனை வழங்கிய தீர்ப்போடு இணைக்கப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை இது. கொலை செய்யப்பட்ட முருகேசன் கொலையாளிகளுக்கு எதிராக ஒரு சிறு குற்றத்தையும் செய்யாதவர். ஆயினும் அவரும் அவருடன் இருந்த ஆறு தலித்துகளும் வெட்டிக் கொல்லப்பட்டனர். காரணம் சாதிவெறி.

இதைப்போன்றே இன்னொரு பிரேதப் பரிசோதனை அறிக்கை செந்தட்டியில் வெட்டிக் கொல்லப்பட்டவர்களுக்கான தீர்ப்பிலும் இணைக்கப்படலாம். இந்த வெட்டுகளை வாங்கிக் கொண்டு துளிர்க்கவே வழியின்றி செத்துக்கிடக்கும் மானுடம். அதையும் இச்சமூகம் பார்த்துக் கொண்டிருக்கும். இது தொடருமெனில் நம்மை நாகரிகச் சமூகம் என்று அழைத்துக் கொள்வதில் எந்தப் பொருளுமில்லை.





கந்தசாமி இசை , பாடல்கள் : கண்றாவி

8 07 2009

சமீபத்தில் பேண்டு மாஸ்டர் தேவி ஸ்ரீ பிரசாத் மிகக் கேவலமாக இசையமைத்துள்ள படம் கந்தசாமி. அதை விட மட்டமானது அதில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள்.

கலைப்புலியிடமிருந்து வரும் ‘உலகத் தர’ படங்கள் எல்லாம் ஏன் இப்படியிருக்கிறது என்று ஆளவந்தானுக்கே வெளிச்சம் !





இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் (for download)

28 06 2009

Thendral Writer Stories Vol 1


Thendral Short Stories Vol 1





பசங்க: பழங்கள்ளு புது மொந்தை

25 06 2009

பசங்க படம் பார்த்தேன். சின்ன பசங்க செம்ம லூட்டி அடிக்கிறாங்க. சினிமாத் தனமாவே எடுத்திருப்பதால் எதார்த்தம் எல்லாம் எதிர்பார்க்க வேண்டாம்.

எதார்த்தமாக எடுப்பதாக சில இடங்களில் இயக்குனர் அவரையே ஏமாற்றிக் கொள்கிறார். செல்போன் காமெடி நல்லா இருக்கு. விமல் இயக்குனர் அமீர் தம்பி போல் தெரிகிறார். குட்டி ராதிகாவின் ஒப்பனை சோபிக்கவில்லை.

என்னத்த தான் திருப்பிப் போட்டு எடுத்தாலும் ஏற்கனேவே நீங்க உங்க அக்கம் பக்கத்துல பார்த்துக்கிட்டுருக்கிற விஷயத்ததான் இந்த படமும் சொல்லுது. இது குழந்தைங்க படந்தானே என்பவர்களுக்கு இப்படத்தின் மூலம் குழந்தைகள் அடிதடி பழகிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது.

பெயருக்குப் பின்னாடி ஐ.ஏ.எஸ் போட்டுக்க இந்த படம் உதவலாம். ஆனால் யாருக்கு இப்போ ஐ.ஏ.எஸ் ஆகனும்னு தல விதி? வேற எதாவது போட்டுக்க சொல்லுங்க உங்க பசங்கள!





Contract : ராம் கோபால் வர்மா செய்த கொலை

25 06 2009


குப்பை என்று ஒதுக்கப்பட வேண்டிய படம் Contract. தீவிரவாத திரைப்படங்களை இயக்குவதில் ராம் கோபால் வர்மா பழம் தின்று கொட்டை போட்டவர். ஆனால் Contract படத்தில் கொட்டை அவர் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது என்று நினைக்கிறேன்.

இதற்கு மேல் ஒன்றுமே இல்லை இந்த படத்தைப் பற்றி எழுத. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.





வெள்ளையனுக்கு இட ஒதிக்கீடு

21 06 2009

W E A V E R. Kanchipuram

ஏன் இட ஒதுக்கீடு ஏற்பட்டது என்பதை புரிந்து தான் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று எஸ்.வி.சேகர் கேட்கிறாரா என்று தெரியவில்லை.
எங்கோ படித்த நினைவு “50-60 வருடம் முன்னவர்கள் செய்த தவறுக்காக இன்று இருப்பவர்களுக்கு ஏன் தண்டனை கொடுக்க வேண்டும்” என்பது போல எஸ்.வி.சேகர் பிராமணர்கள் இட ஒதுக்கீடு பற்றி பேசியிருக்கிறார்.
என்னைப் பொருத்தவரை எஸ்.வி.சேகரின் இந்த கோரிக்கை மைலாப்பூர் மனப்பான்மையே காட்டுகிறது. இவருக்கு பலமாக தமிழக பிராமணர் சங்கமும் செயல்படுகிறது என்று நினைக்கிறேன். எஸ்.வி.சேகரின் இந்த கோரிக்கையை கேட்டவுடன் எனக்குத் தோன்றியது ஏன் வெள்ளையர்கள் இன்னும் இந்தியாவில் இட ஒதிக்கீடு கேட்கவில்லை என்பதே ? வெளி நாட்டிலிருந்து வந்த இவர்கள் மக்கள் தொகையில் 2% சதவிகிதம் உள்ளதாக பால் வடியும் சங்கத்தின் ஆய்வு தெரிவிக்கின்றது. இவர்களில் பலர் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டு காசி , காஞ்சி என ஊர் ஊராக பரதேசி என்ற சொல்லுக்கு இலக்கணமாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு அரசு சலுகைகளும் உதவித் தொகையும் தருவது அவசியம்.
அடுத்து பண்ணையார்கள் , ஜமீந்தார்கள் என ஒதுக்கீடு பட்டியல் வளரலாம் … இதில் சிலருக்கு ஏற்கனவே இடஒதுக்கீடு இருந்தால் அதுவும் ஆச்சரியப்படுவதற்கில்லை !




கண்ணீர் ரணமானது

27 05 2009

 

இலங்கை

கண்ணீர் ரணமானது

 

சில தவறுகள் என்றுமே நடந்துவிடக் கூடாது என்பதை சரித்திரம் மீண்டும் மீண்டும் பாடம் எடுக்கிறது.  ஆனால் மனிதன் அதனைக் கற்றுக் கொண்ட பாடில்லை.

இரு இன வாதிகள் போரிட்டால் என்ன நடக்கும் ? நாடே பன்றிகளைப் போல் இனவாதம் எனும் சேற்றில் உழன்று கொண்டிருக்கும். மக்களிடையே இனத்தாலோ , சாதியாலோ , நிரத்தாலோ பிளவு ஏற்பட்டுவிட்டால் என்றுமே  அம்மக்கள் ஒற்றுமையுடன் வாழ முடியாது. பிறகு ’இட ஒதுக்கீடு’ , மைநாரிட்டிகளுக்கு சலுகை என்று சலுகையை எதிர்ப்பார்ப்பவர்களாக அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் அல்ல கட்டம் கட்டபடுகிறார்கள்.

யூதர்களுக்கு ஹலோகாஸ்ட் , கருப்பர்களுக்கு வெள்ளையனின் நிரவெறி என்ற வரிசையில் தமிழனுக்கு சிங்களனின் இனவாதம் என்பது சரித்திரத்தில் அழியாத ரணம்.

இந்த ரணம் இரு முனைக் கொண்டது. 

***

உதாரணமாக மியான்மர். அந்நாட்டில் இராணுவத்திற்கு எதிராக நடந்த சமீபத்திய போராட்டத்தில் புத்த துறவிகள் மிகவும் மென்மையான முறையில் போராடினார்கள். உண்ணாநிலை , அறவழியில் கூட்டங்கள் என்று நடத்தினார்கள். துப்பாக்கி முன் நின்றும் வெறும் காவி துணியுடன் தன் மனவலுவை மட்டும் நம்பி நின்ற இந்த வீரர்களுக்குக் கிடைத்தது என்ன ? அடியும் உதையும். இதில் பலர் காணாமல் போயுள்ளனர். இருக்கவே இருக்கிறார் அகிம்சாவாதி சூ கி. வீட்டுச் சிறையில் பல்லாண்டுகளாக.

உலக நாடுகளால் மியன்மார் சர்வாதிகாரிகளை என்ன செய்ய முடிகிறது ?

அடுத்து டிபெட், இதே பௌத்த மதத்தின் மென்மையான கொள்கையினை முன்நிறுத்துபவர் தான் தலாய் லாமா. ஆனால் அவரால் இன்று வரை டிபெட் என்ற நாட்டின் தனித்துவத்தை நிலைநாட்ட முடியவில்லை.

ஆனால் பௌத்த மதம் அகிம்சையை மட்டும் கற்பிக்கவில்லை என்பதற்கு இன்றைய இலங்கை போதுமானது.

1950க்குப் பின் தென்னாப்பிரிக்காவைத் தவிர வேறு எந்த நாடும் அகிம்சா வழியில் விடுதலை அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களும் நெல்சன் மண்டேலா விடுதலையாகும் வரை வன்முறையை பல நியாயங்களுடன் போராட்ட முறையாகக் கொண்டிருந்தனர் என்று குறிப்பிடத்தக்கது.

ஆனால் இத்துனை அமைதிப் போருக்கும் உலக அளவில் இன்று வரை ஆதரவு கவிழ்ந்ததில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

***

இருப்பினும் , கருப்பர்கள் எல்லாம் பாவமானவர்கள் , தமிழர்கள் எல்லாம் நெறியுடையவர்கள் , யூதர்கள் எல்லாம் பரந்த மனப்பான்மையுள்ளவர்கள் என்று சரித்திரத்தைக் காட்டி பொத்தாம் பொதுவாக எமொஷனல் பிளாக்மெயில் செய்வதும் தவறு.

வாட்டிகனின் கதோலிக்க சித்தாந்தங்களை எதிர்க்க கலிலியோ அறிவியலை ஆயுதமாக்கினான். ஷேக்ஸ்பியரோ லத்தின மொழியைவிட்டு ஆங்கிலத்தில் இலக்கியம் படைத்தார். இப்படி ‘அகிம்சை’ முறையில் எதிர்ப்பவர்கள் சரித்திரத்தில் நாயகர்களாக எந்த விளக்கமுமின்றி பொது மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் ஆயுதம் ஏந்தி போராடுபவர்களுக்கு எத்தகையத் சம்பாஷனைகள் தேவைப் படுகிறது பாருங்கள் – பொது மக்களின் பொருட்செல்வம் , பொய்யான ஊடக பிம்பம் மற்றும் பிரச்சாரம் , அரசியல் பகடைக் காய்கள் மற்றும் என்றும் குறையாத மக்கள் ஆதரவு. இது போதாதென்று தலைவனுக்காக உயிர் கொடுக்க அப்பாவிகள்.

போராடுபவர் பக்கம் அதிகாரமோ அரசாங்கமோ இல்லாத நிலையில் பொது மக்களின் ஆதரவை என்றுமே போராட்ட இயக்கங்கள் இழக்காமல் இருப்பதே அந்த போரட்டத்திற்கு செய்யும் நீதியாகும். தலையை மட்டுமே சுற்றி நடக்கும் போராட்டம் சர்வாதிகாரத்திற்கே வித்து. அத்துடன் இனவாதம் சேர்ந்தால் , நினைத்துப் பார்க்கவே கொடூரமாக இருக்கிறது !